குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:23 PM GMT (Updated: 14 Aug 2019 11:23 PM GMT)

குற்றாலம் அருவிகளில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சீசன் நன்றாக உள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டத்தின் மட்டும் அல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பன்னீர் தெளித்தார் போல் தூறியது. வெயிலே இல்லை. குளிர்ந்த காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.

நேற்று அதிகாலையில் குற்றாலம் மெயின் அருவியில் திடீரென்று நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 12 மணி அளவில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அதில் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Next Story