சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்


சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 9:13 PM GMT)

சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள். மேலும் டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூளகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெண்ணேர்கட்டா அருகில் உள்ள அரிக்கெரே பி.டி.எஸ் லேஅவுட் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 40). இவரது கணவர் உமேஷ். வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் மகேஷ் என்பவரது மனைவி அம்பிகா(35).

இந்த நிலையில் ஹேமலதா மற்றும் அம்பிகா ஆகிய இருவரும் தங்களது உறவினர்களான சர்வமங்களா(48), சுமித்ரா(45), வித்யா(25) மற்றும் லதா(38) ஆகியோருடன் ஒரு ஆம்னி வேனில், பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு சென்றனர். வேனை டிரைவர் நாகபூஷணம்(50) என்பவர் ஓட்டி சென்றார். கிரிவலத்தை முடித்து நள்ளிரவில் அவர்கள் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி என்ற இடத்தில் நேற்று அதிகாலை வேன் வந்த போது, பின்னால் வந்த ஒரு கன்டெய்னர் லாரி, வேனின் பின்புறம் மோதியது. இதில் காரின் பின்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

2 பெண்கள் பலி

இந்த விபத்தில் ஹேமலதா மற்றும் அம்பிகா பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் விபத்தில் டிரைவர் நாகபூஷணம் மற்றும் சர்வமங்களா, சுமித்ரா, வித்யா, லதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியும் சாலையில் கவிழ்ந்தது.

இதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஏட்டுராஜ் (32) என்பவருக்கும் கால் முறிந்து படுகாயம் ஏற்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் இருந்து மருந்து பொருட்கள் பாரத்தை கன்டெய்னர் லாரியில் பெங்களூரு நோக்கி கொண்டு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது, கார் விபத்துக்குள்ளாகி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story