சேலம் அருகே, விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர், நகையை திருடிய கும்பல்


சேலம் அருகே, விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர், நகையை திருடிய கும்பல்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:26 PM GMT (Updated: 17 Aug 2019 10:26 PM GMT)

சேலம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர் மற்றும் நகையை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொண்டலாம்பட்டி,

சேலம் அருகே உள்ள அரியானூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேலன்(வயது 37), தறித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் உத்தமசோழபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு முருகவேலன் காயம் அடைந்தார்.

இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனிடையே முருக வேலன் கொண்டலாம்பட்டி போலீசாரிடம் புகார் ஒன்று கொடுத்தார்.

அந்த மனுவில், விபத்தில் சிக்கிய தன்னை காப்பாற்றுவது போல் நடித்து 4 பேர் கொண்ட கும்பல் தனது ஸ்கூட்டர், 3½ பவுன் நகை, ஒரு செல்போன் மற்றும் ரூ.3,500-ஐ திருடி சென்றுவிட்டதாக கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முருகவேலன் நகை, பணம் வைத்திருந்தாரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதவிர, விபத்தில் சிக்கிய தொழிலாளியிடம் திருடிச் சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story