திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் விழா பேனர் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் விழா பேனர் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 7:26 PM GMT)

திருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா பேனரை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம் பூம்புகார் போலீஸ் சரகம் வானகிரி நாகநாதன்கோவில் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் வரவேற்பு பேனர் வைத்திருந்தனர். இந்த பேனரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கட்சியின் முகாம் செயலாளர்கள் கணேசமூர்த்தி, சுபாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வானகிரி-பூம்புகார் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனை அறிந்த பூம்புகார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ராஜகோபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story