பிரதமர் மோடி நாளை மறுநாள் மும்பை வருகை


பிரதமர் மோடி நாளை மறுநாள் மும்பை வருகை
x
தினத்தந்தி 4 Sep 2019 11:15 PM GMT (Updated: 4 Sep 2019 7:59 PM GMT)

மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் மும்பை வருகிறார்.

மும்பை, 

மும்பை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதில், 10-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் தானே- காய்முக்- சிவாஜி சவுக் இடையே 11 கி.மீ. தூரத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிலும், 11-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் வடலா- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையே சுரங்கமார்க்கமாக 14 கி.மீ. தூரத்துக்கு 8 ஆயிரம் கோடி செலவிலும், 12-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் கல்யாண்- நவிமும்பை தலோஜா இடையே 25 கி.மீ. தூரத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவிலும் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்த 3 மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் அண்மையில் மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டங்களுக்கும், மும்பை மெட்ரோ பவன் அமைப்பதற்கும் நாளை மறுநாள்(சனிக்கிழமை) பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள கான்வன்சன் சென்டரில் பூமி பூஜை நடக்கிறது. 

இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மேற்கண்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தகவல் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அன்றைய தினமே அவுரங்காபாத், நாக்பூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொள்கிறார்.

Next Story