வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 5 Sep 2019 10:00 PM GMT (Updated: 5 Sep 2019 8:31 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சியில் வைராபாளையம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுக்கும் பணியும், பீளமேடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும், லக்காபுரம் ஊராட்சி விநாயகர் நகரில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் செலவில் பண்ணை குட்டை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பண்ணை குட்டைக்கு தண்ணீர் வரும் வழி, தண்ணீரை தேக்கி வைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் நஞ்சை ஊத்துக்குளி, ஈ.பி.நகர் பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மரம் வளர்த்தல் பணி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் குட்டப்பாளையம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரும் பணி, மொடக்குறிச்சி பகுதியில் ரூ.28 லட்சம் செலவில் ஊஞ்சலூர் வாய்க்கால் பராமரிப்பு பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேபோல் மொடக்குறிச்சி பேரூராட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தரைமட்டத் தொட்டியும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவில் குடியிருப்பு கட்டிடமும் கட்டப்பட்டு உள்ளது. மேற்கண்ட வளர்ச்சி திட்ட பணிகளை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளரும், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான கா.பாலச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அவருடன், மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story