ஆலங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை - மகனுடன் தம்பி கைது


ஆலங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை - மகனுடன் தம்பி கைது
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 9:00 PM GMT)

ஆலங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பியையும், அவருடைய மகனையும் போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரம் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 65), விவசாயி. இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ரத்தினசாமியின் தம்பி அமிர்தம் (60). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினசாமியும், அமிர்தமும் சேர்ந்து கிணறு வெட்டி விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த கிணற்று தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவது தொடர்பாக 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலையில் அமிர்தம் தோட்டத்தில் பயிரிட்டுள்ள பருத்தி செடிகளுக்குள் ரத்தினசாமி தனது மாடுகளை மேய்த்துள்ளார். இதை அறிந்த அமிர்தம் மற்றும் அவரது மகன் ஜான் செல்லத்துரை (30) ஆகியோர் தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பருத்தி செடிகளை மாடுகள் மேய்வது குறித்து ரத்தினசாமியிடம் அவர்கள் தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் கம்பால் தாக்கப்பட்ட ரத்தினசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். உடனே, அங்கிருந்து அமிர்தமும், ஜான் செல்லத்துரையும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமிர்தம் தோட்டத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அந்த இடத்துக்கு சென்று ரத்தினசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அமிர்தமும், அவரது மகன் ஜான் செல்லத்துரையும் ரத்தினசாமியை அடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேல்விசாரணை நடந்து வருகிறது.

Next Story