பவானி அருகே பரிதாபம்; லாரி ஓட்டும்போது உரிமையாளர் திடீர் சாவு


பவானி அருகே பரிதாபம்; லாரி ஓட்டும்போது உரிமையாளர் திடீர் சாவு
x
தினத்தந்தி 4 Oct 2019 10:45 PM GMT (Updated: 4 Oct 2019 5:10 PM GMT)

பவானி அருகே லாரி ஓட்டும்போது உரிமையாளர் திடீரென இறந்தார்.

பவானி,

புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவருடைய மனைவி லதாமணி(49). செல்வராஜ் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை புளியம்பட்டியில் இருந்து கவுந்தப்பாடிக்கு லாரியை ஓட்டிச்சென்றுகொண்டு இருந்தார்.

பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையதில் சென்றபோது, திடீரென செல்வராஜ்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் லாரியை நிறுத்த முயன்றார்.

ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டு ஓரமாக இருந்த ஒரு ஓட்டலின் முன்புறத்தில் மோதி நின்றது. செல்வராஜ் இருக்கையிலேயே அசைவற்று கிடந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் செல்வராஜை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்கள்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்வராஜின் உடலை பார்த்து அவருடைய மனைவி லதாமணி கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story