பாடாலூரில் பெண்ணை கடித்து குதறிய கொள்ளையர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு


பாடாலூரில் பெண்ணை கடித்து குதறிய கொள்ளையர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 10:30 PM GMT (Updated: 15 Oct 2019 7:37 PM GMT)

பாடாலூரில் பெண்ணை கடித்து குதறிய கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமம், சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் விவேகானந்தன் மகள் கவுசல்யா(வயது 24). இவர் நேற்று காலை கடைத்தெருவுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பாடாலூர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கவுசல்யாவை வழிமறைத்து அவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

அப்போது சுதாரித்துக்கொண்ட கவுசல்யா தங்க சங்கிலியை பிடித்துக்கொண்டு கீழே உட்காரவே ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கவுசல்யாவை கடித்து குதறிவிட்டு தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அதற்குள் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அதில் ஒருவன் மட்டும் சிக்கிக்கொண்டான்.

மற்றொருவன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றான். உடனே இதில் காயம் அடைந்த கவுசல்யாவை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக பாடாலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

2 பேர் கைது

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் உடனடியாக கொள்ளையன் தப்பி சென்ற பகுதியில் இருந்த ரோந்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையனை ரோந்து பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சென்னையை அடுத்துள்ள வியாசர்பாடியை சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார்(19) மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாடாலூர் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story