பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் ‘‘மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது’’ - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் ‘‘மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது’’ - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2019 11:15 PM GMT (Updated: 15 Oct 2019 10:28 PM GMT)

‘‘பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது‘‘ என்று நாங்குநேரி பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நெல்லை, 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மூன்றடைப்பு பகுதியில் இருந்து அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கு கூடி இருந்த கூட்டத்தினர் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் உங்களின் ஆசியோடு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி இந்த பகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவார். குறிப்பாக அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிச்சயமாக அவர் செய்து தருவார் என்று இந்த நேரத்தில் நான் உறுதி கூறுகிறேன்.

நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியினரால் இடைத்தேர்தல் வந்து உள்ளது. அவர்களுக்கு வாக்காளர்களாகிய நீங்கள் இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சிகளில் மக்களுக்கு தேவையான பல திட்டங்களை நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசுதான்.

காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு பெரும் துரோகம் செய்து உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இருக்கும்போது தான் காவிரி பிரச்சினை ஏற்பட்டது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் அப்போது, ஆட்சியில் இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினர் இதை செய்யவில்லை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி செய்தார். ஆனால், கர்நாடகத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கமாட்டோம் என்று பிரசாரம் செய்தார். எனவே, இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

மருத்துவ படிப்புக்கான ‘நீட்‘ தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். அப்போது, கூட்டணியில் இருந்த தி.மு.க. இதை கண்டிக்கவில்லை. தற்போது வந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். அவரது பொய் மூட்டைகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டத்தை அமைத்து ரே‌‌ஷன் கடையில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கினார். தமிழகத்தில் 12 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டது. இது காங்கிரீட் வீடாக மாற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி இதுவரை 6 லட்சம் குடிசை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டு உள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசை வீடுகளே இருக்காது.

பெண்களுக்கு திருமண நிதியுதவி, 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு உள்ளது. பேறுகால நிதியாக ரூ.18 ஆயிரம், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா அறிவித்த திட்டத்தைவிட கூடுதலான திட்டங்களையும் அறிவித்து அதை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, 8 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்று கூறுகிறார். 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மின்தட்டுப்பாட்டை நீக்கி தமிழகம் மின்மிகை மாநிலமாகி மாறி, வெளிமாநிலத்திற்கும் மின்சாரம் வினியோகம் செய்கிறோம்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு தான் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகளை உருவாக்கி 37 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்து உள்ளோம். இது அவருக்கு இந்த ஆட்சியின் சாதனையாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை குறைசொல்வதிலேயே குறியாக உள்ளார். அவருக்கு ஒரே ஒரு கனவு தான். எதையாவது மக்களிடம் சொல்லி எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்பது தான். நான் சொல்கிறேன், பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது. தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி தான் நடக்கும். மக்களுக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மக்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு அமோகமாக உள்ளது. இந்த தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். நமது வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தெய்வபக்தி உள்ளவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். அவருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், சரோஜா, ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர்கள் மனோஜ் பாண்டியன், சுதா பரமசிவன், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, பிரபாகரன், அனைத்துலக எம்.ஜிஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பிரசாரத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க.வினர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மறுக்கால்குறிச்சி, இட்டமொழி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

Next Story