செட்டிப்பட்டு படுகை அணையில் தற்காலிக தடுப்பு அமைத்து சங்கராபரணி ஆற்று நீரை சேமிக்க வேண்டும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. கோரிக்கை


செட்டிப்பட்டு படுகை அணையில் தற்காலிக தடுப்பு அமைத்து சங்கராபரணி ஆற்று நீரை சேமிக்க வேண்டும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2019 9:56 PM GMT (Updated: 2 Nov 2019 9:56 PM GMT)

செட்டிப்பட்டு படுகை அணை நிரம்பி ஆற்றுதண்ணீர் வீணாதை தடுக்கும் வகையில் தற்காலிக தடுப்பு அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நீர் ஆதாரத்தை சேமிக்கும் வகையில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை படுகை அணை கட்டும் பணி தொடங்கியது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இந்த பணி முடி வடையாமல் உள்ளது. இந்த பணி மிகவும் மந்த நிலையில் நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்..

இந்தநிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

படுகை அணை கட்டும் பணி முழுமையாக முடிவடையாமல் உள்ளதால் சங்கராபரணி ஆற்றில் வரும் தண்ணீரை தற்போது விவசாயத்துக்காக தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அதனால் ஆற்றில் உள்ள மழை வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது.

இந்த தகவல் அறிந்ததும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. நேற்று செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் கட்டப்பட்டு வரும் படுகை அணை பணியிணை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கிராமமக்களும், விவசாயிகளும் உடன் சென்றனர். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் தீவிர முயற்சியினால் இந்த படுகைஅணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இன்னமும் பணி முழுமை பெறாததால் சங்கராபரணி ஆற்றில் தற்போது மழை வெள்ள நீரை விவசாயத்துக்காக தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆற்றில் வரும் நீர் வெளியேறி வீணாக கடலில் சென்று கலக்கிறது.

இனி வரும் காலங்களில் மழைநீர் வீணாகாத வண்ணம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த படுகை அணை கட்டும் பணியிணை விரைவுப்படுத்தி கட்டி முடிக்க வேண்டும்.

மேலும தற்போது தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி மழைநீர் வீணாகாத வண்ணம் தற்காலிக தடுப்பு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இது தொடர்பாக புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசினார்.

Next Story