தா.பேட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


தா.பேட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:15 PM GMT (Updated: 3 Nov 2019 8:30 PM GMT)

தா.பேட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைத்தம்பாறை கிராமத்தில் வசித்து வருபவர் வீரையா (வயது 69). இவர் முசிறி தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அமராவதி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

வீரையாவின் மகளுக்கு வருகிற 15-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வீரையா வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அமராவதி தனது மகளை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

நகை, பணம் திருட்டு

பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்து தா.பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பரபரப்பு

மேலும் இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மகளுக்கு வருகிற 15-ந்தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story