ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் - நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை


ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் - நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 8:35 PM GMT)

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் எந்திர துப்பாக்கிகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சமூக விரோதிகள் மற்றும் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளில் வாகன சோதனையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் எந்திர துப்பாக்கிகளுடன் சுமார் 10-க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். செண்பகத்தோப்பு வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களில் ஒரு குழுவினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் சென்று வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா அல்லது சமூக விரோதிகள் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து சோதனை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Next Story