பெட்ரோல் குண்டுகள் வீசி 2 பேர் கொலை: சேலம் கோர்ட்டில் வக்கீல் சரண்


பெட்ரோல் குண்டுகள் வீசி 2 பேர் கொலை: சேலம் கோர்ட்டில் வக்கீல் சரண்
x
தினத்தந்தி 25 Nov 2019 11:00 PM GMT (Updated: 25 Nov 2019 8:58 PM GMT)

பெட்ரோல் குண்டுகள் வீசி 2 பேரை கொலை செய்த வழக்கில் போலீசார் தேடி வந்த மதுரையை சேர்ந்த வக்கீல் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

சேலம்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் கடந்த 11-ந் தேதி இரவு கார் மீது லாரியை மோத விட்ட கூலிப்படையினர் கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இ்தில் கார் டிரைவர் முரளி சம்பவ இடத்திலும், ஓசூர் தொழில் அதிபர் நீலிமா ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.

தொழில் போட்டி காரணமாக நடந்த இந்த இரட்டை கொலை தொடர்பாக மதுரையை சேர்ந்த லாரி டிரைவர் மகராஜன், ஓசூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன், சாந்தகுமார் ஆகிய 3 பேரை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்திருந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளர் நீலமேகம், அசோக் ஆகிய 2 பேரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

சேலம் கோர்ட்டில் சரண்

இந்த கொலை தொடர்பாக ஓசூரை சேர்ந்த ராமு, மஞ்சுநாத் என்கிற ஜாகீர் ஆகிய 2 பேர் கர்நாடக மாநிலம் மாஸ்தி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஓசூரை சேர்ந்த தொழில் அதிபர் ராமமூர்த்தி, மதுரை காளிமுத்து நகர் பகுதியை சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன் (வயது 36) உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தேடி வந்த மதுரையை சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன், சேலம் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவா முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை வருகிற 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, வக்கீல் வெங்கட்ராமன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகவும், திட்டம் வகுத்து கொடுத்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வலைவீச்சு

கடந்த 11-ந் தேதி இரவு கொலையை விபத்து போல நிகழ்த்திய உடன், மறுநாள் போலியாக டிரைவரை சரண் அடைய வைக்க வக்கீல் வெங்கட்ராமன் வந்ததாகவும், போலீசார் இந்த வழக்கை கொலை என கண்டுபிடித்ததை அறிந்த வக்கீல் வெங்கட்ராமன் பின்பு தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவரை வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஓசூர் பிரபல தொழில் அதிபர் ராமமூர்த்தி உள்பட மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story