திருமலைராஜன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வீடுகளில் மழைநீர் புகுந்தது


திருமலைராஜன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வீடுகளில் மழைநீர் புகுந்தது
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 4:54 PM GMT)

திருமலைராஜன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகளில் மழைநீர் புகுந்தது.

திருமருகல்,

திருமருகல் பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குக்கிராமங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறையினர், வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

வீடுகளில் மழைநீர் புகுந்தது

இந்தநிலையில் திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் அருகே போலகம் மெயின்சாலையில் 20 வீடுகள் அமைந்துள்ளன. திருமலைராஜன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் வீடுகளை மழைநீர் சூழ்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாமல் உள்ளே முடங்கி உள்ளனர். இப்பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் போலகம் ஊராட்சி செயலர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் அப்பகுதியில் தேங்கிய மழைநீர் வடியவும், தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story