திருவாரூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி


திருவாரூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 Dec 2019 11:15 PM GMT (Updated: 11 Dec 2019 6:51 PM GMT)

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியானார்கள்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கோவில்திருமாளம் தலையாரிபாளையம் தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன்கள் இளையராஜா(வயது 27), இளவரசன்(25). இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுடைய மாமா பாரி (38).

இவர்கள் 3 பேரும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் முன்புறமும், பின்புறமும் கூரைக்கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடாமல் இருக்க வீட்டையும், கூரையையும் இணைக்கும் பகுதியில் தகரம் அமைக்கும் பணியில் இளையராஜா, இளவரசன், பாரி ஆகியோர் நேற்று மாலை ஈடுபட்டு இருந்தனர்.

3 பேர் பலி

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வீட்டுக்கு வரும் மின்சார வயரில் தகரம் உரசியது. உடனே தகரத்தை பிடித்திருந்த இளையராஜா, இளவரசன், பாரி ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இளையராஜா, இளவரசன், பாரி ஆகிய 3 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த பாரிக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story