குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேர் கைது
திருவாரூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேறியது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. இளைஞரணி சார்பில் புதிய குடியுரிமை சட்ட திருத்த நகலினை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா தலைமை தாங்கினார். கட்சியின் நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதாசேகர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்து, திருத்தப்பட்ட புதிய குடியுரிமை சட்ட நகலினை கிழித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story