‘‘பிரதமர் மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன’’ காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேட்டி


‘‘பிரதமர் மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன’’ காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2019 10:00 PM GMT (Updated: 24 Dec 2019 8:01 PM GMT)

பிரதமர் மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

பிரதமர் மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;-

மக்கள் நிராகரித்தனர்

ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாகி உள்ளது. நாட்டு மக்களின் மனநிலை எப்படி உள்ளது? என்பதை இந்த தேர்தல் முடிவு தெளிவாக காட்டுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்‌ஷா ஆகியோர் ஜார்கண்டில் தீவிரமாக பிரசாரம் செய்தனர். பா.ஜனதாவுக்கும், அக்கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தருமாறு மக்களிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், மக்கள் அவர்களது வேண்டுகோளை நிராகரித்து விட்டனர். பா.ஜனதாவின் கொள்கைகள் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மக்களின் மனநிலையை முழுமையாக மாற்றி உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அவரது அரசு நாட்டின் அரசியல் அமைப்பையே சீர்குலைத்து வருகிறது. மேலும், மக்களின் எண்ணங்களுக்கு மாறாக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இவை ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் தெளிவாக எதிரொலித்து உள்ளது.

நாட்கள் எண்ணப்படுகின்றன

பிரதமர் நரேந்திர மோடி அரசின் நாட்கள் தற்போது எண்ணப்படுகின்றன. மத்திய பா. ஜனதா அரசின் சரிவு தொடங்கிவிட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை வரும் நாட்களில் மேலும் கடுமையாக மாறும். தற்போது மாணவர்களும், இளைஞர்களும் தெருவிற்கு வந்து பா.ஜனதா அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். ஏராளமான மக்களும் இணைந்து போராடுகின்றனர்.இந்த போராட்டம் மேலும் அதிகமாகும். இதன்மூலம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆட்சியை நடத்தவில்லை என்ற மக்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story