நச்சலூர் பகுதிகளில் நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை


நச்சலூர் பகுதிகளில் நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2020 10:45 PM GMT (Updated: 18 Jan 2020 3:16 PM GMT)

நச்சலூர் பகுதிகளில் விளைந்த நெற்பயிர் களில் குலைநோய் தாக்கி உள்ளது. இதனால் அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம், சூரியனூர், நச்சலூர், நங்கவரம், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, கட்டாணிமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் நெற் பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்தநிலையில் விளைந்த நெற்பயிர்களில் குலை நோய் தாக்கி 70 சதவீதம் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் நெற்கதிர்கள் விளைச்சல் மற்றும் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. குலை நோய் தீவிர தாக்குதலில் நெற்பயிர்கள் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றத்துடன் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இதுவரை செலவு செய்த விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆடி மாதத்தில் நெற்பயிர்கள் நடவு செய்து தை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். அது போல் கடந்த ஆடி மாதம் நடவு செய்து விவசாய பணிகளை செய்து வந்தோம். தற்போது நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும் நேரத்தில் நெற்பயிர்களில் குலை நோய் தாக்கியதில் பயிர்கள் காய்ந்து சருகு போல காட்சியளிக்கின்றது. இதனால் 70 சதவீதம் நெல் விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது. இதற்காக செலவு செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. குலை நோய் தாக்குதலில் பாதிப்பு அடைந்ததால் மாடுகளுக்கு வைக்கோல் தீவனங்களுக்கு கூட பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நெல் சாகுபடி செய்த விவசாய குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருந்து வருகின்றோம். சாகுபடி செய்த நெற்பயிர்களுக்கு காப்பீட்டு தொகையையும் செலுத்தி உள்ளதால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கணக்கீடு செய்து அரசு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.

Next Story