காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 12:30 AM GMT (Updated: 9 Feb 2020 6:45 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,022 கோடி மதிப்பில் சுமார் 1,100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படுகிறது.

இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, விவசாய பெருவிழா ஆகியவை நேற்று தலைவாசலில் நடைபெற்றது.

விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிரு‌‌ஷ்ணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விவசாய பெருவிழாவின் கண் காட்சியை தொடங்கிவைத்தார். இதையடுத்து ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் செங்கலை எடுத்து வைத்தார். அடுத்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் செங்கலை எடுத்து வைத்தனர்.

பின்னர் கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் புதிய குடிநீர் திட்டப்பணி களுக்கான கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

கால்நடை வளர்ப்பில் ஏற்பட்ட வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லவும், அதனால் விவசாயிகள் மேலும் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த கால்நடை பூங்காவுக்கான திட்டத்தை தீட்டி, அது எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உத்திகளை பல வல்லுநர்களிடம் பல நாட்களாக கலந்து ஆலோசித்தேன். மேலும், நான் அண்மையில் அமெரிக்கா சென்றபோது, பப்பலோ நகரில் உள்ள பெரிய கால்நடை பண்ணையை பார்வையிட்டு, அங்கு கடைப்பிடிக்கப்படும் அதிநவீன உத்திகளை கண்டறிந்து, இந்த கால்நடை பூங்காவில் அவற்றை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளேன்.

இந்த கால்நடை பூங்கா சுமார் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இந்த பூங்கா 3 பிரிவாக அமையும். முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையிலான கறவை மாட்டுப் பண்ணை ஆகியவை அமைக்கப்படும். இதுதவிர, காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய உள்நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க பண்ணையும், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி போன்ற நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடங்கிய கால்நடைப் பண்ணையாக உருவாக்கப்படும்.

அதேபோல, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, சென்னை சிவப்பு, கீழக்கரிசல், வேம்பூர், திருச்சி கருப்பு, கோயம்புத்தூர், கச்சைக்கட்டி கருப்பு, செவ்வாடு மற்றும் நீலகிரி போன்ற உள்நாட்டு செம்மறி ஆட்டினங்கள் மற்றும் கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு போன்ற வெள்ளாட்டினங்களின் இனப்பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடக்கிய பண்ணையாகவும் உருவாக்கப்படும். வெண் பன்றிகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த வெண்பன்றிப் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

பூங்காவின் இரண்டாம் பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை பாதுகாத்து பதப்படுத்துதல், அவற்றில் இருந்து உபபொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப் படுத்துவதற்கான வசதிகள் உருவாக்கப்படும். இங்கு அமையவிருக்கும் மீன் வள மாதிரி வளாகத்தில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிலான மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் தரமான மீன் குஞ்சுகள் மீன் வளர்ப்போருக்கு வழங்கப்பட உள்ளது.

பூங்காவின் மூன்றாம் பிரிவில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உயர் கல்வி, ஆராய்ச்சி, விவசாயிகளுக்கான பயிற்சி மையம், தொழில் முனைவோர் பயிலரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வளாகம் அமைக்கப்படும். இதே வளாகத்தில் ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி ரூ.82.17 கோடி செலவில் அமைக்க இருக்கிறோம். இதன் மூலம் 80 கால்நடை மருத்துவ படிப்புக்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட வளாகமாக இது அமையும்.

இங்கு 500 கலப்பின பசுக்கள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கால்நடைப் பண்ணை ஒன்று உருவாக்கப்படும். இதில் 25 ஆயிரம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறன் உள்ள, 12 வகையான பால் உபபொருட்கள் தயாரிக்கும் தானியங்கி அதிநவீன தொழிற்சாலையும், 50 டன் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன கால்நடை தீவன மற்றும் தாது உப்புக்கலவை தொழிற்சாலையும் அமைய உள்ளது.

இவ்வளாகத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திட மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படும்.

அடுத்து நெடுவாசல் பிரச்சினை. என்னதான் மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தாலும், மாநில அரசு தடையில்லாச் சான்று அளிக்காமல், அங்கு பணிகளை தொடங்கவே முடியாது. இது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும். மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அ.தி.மு.க. அரசு ஒரு போதும் அதற்கு தடையில்லாச் சான்று வழங்காது என்று சட்டமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி பலமுறை நான் வலியுறுத்தி வருகிறேன். உண்மை நிலை என்னவென்றால், தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு வித்திட்டது தி.மு.க.வில் அங்கம் வகிக்கின்ற டி.ஆர்.பாலுதான்.

1996-ம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத்துறை இணை மந்திரி டி.ஆர்.பாலு, இத்திட்டத்தை தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010-ம் ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றார். அதேபோல ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப்பணி தொடங்க, 4 ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது தி.மு.க. அரசுதான். அதுவும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், இத்திட்டத்திற்கான அனைத்து உதவியையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அப்போதைய தி.மு.க. அரசு கூறியது. ஆனால் தற்போது தங்களது பொய் பிரசாரம் மூலம் தங்கள் கட்சியினரை திரட்டி, அங்கே போராட்டம் செய்வோம் என்று பிரச்சினை கிளப்பி வருகின்றனர்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்ததே தி.மு.க.தான், நிறைவேற்றியதும் தி.மு.க. தான். இதை பேட்டியிலேயே டி.ஆர்.பாலு தெரிவித்தார். அது ஊடகத்திலும், பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. தி.மு.க.தான் அதை கொண்டு வந்தது என்று அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசு. இந்த திட்டத்தை எல்லாம் தடுத்து நிறுத்தியது எங்களுடைய அரசு என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் ‘‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’’ மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகின்றேன். டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பதற்காக எங்களுடைய அரசு காவிரி டெல்டா பகுதிகளை ‘‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’’ மாற்றப்படும் என்ற அறிவிப்பை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீண்ட காலமாக டெல்டா பகுதியிலே இருக்கின்ற விவசாய பெருமக்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே, அந்த உள்ளக் குமுறல்களை எங்களுடைய அரசு உணர்வுபூர்வமாக தெரிந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சராக இருந்தாலும் நானும் ஒரு விவசாயி. அந்த விவசாயி என்ற நிலையிலே இருந்து பார்த்து, விவசாயிகள் படும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், முழுமையாக அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இதனை நான் அறிவித்திருக்கின்றேன். இதை செயல்படுத்திட சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து, வழிமுறைகளை ஆராய்ந்து, இதற்காக ஒரு தனிச் சட்டம் இயற்றிட அ.தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு அ.தி.மு.க. அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழகத்திலே இனி கொண்டு வர முடியாது, அதற்கு நாங்கள் அனுமதியும் அளிக்க மாட்டோம்.

எனினும், காவிரி டெல்டா பகுதியில் விளையும் விளைபொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளையும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளையும் தேவைக்கேற்ப இந்த அரசு ஊக்குவிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பின்னர், 38 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 739 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story