400 கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு


400 கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 19 Feb 2020 10:42 PM GMT (Updated: 19 Feb 2020 10:42 PM GMT)

மாவட்டத்தில் திடீரென நீக்கப்பட்ட 400 கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமையில் கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் திரளாக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.யிடம், ஒரு சிலருடன் மட்டும் சென்று மனு கொடுக்குமாறு கூறினர்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், நாங்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்போம்’ என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., களப்பணியாளர்கள் சிலருடன் கலெக்டர் ராமனை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்த மனுவில், ‘சேலம் மாவட்டத்தில் 400 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது தினக்கூலியாக ரூ.387 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி களப்பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப் பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்.ஆர்.பார்த்திபன் கூறும் போது, ‘பாதிக்கப்பட்ட கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

Next Story