குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது கோவை முஸ்லிம்கள் போராட்டத்தில் சீமான் பேச்சு


குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது கோவை முஸ்லிம்கள் போராட்டத்தில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2020 12:30 AM GMT (Updated: 22 Feb 2020 9:15 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது என்று கோவையில் நடந்த முஸ்லிம்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

போத்தனூர்,

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம்கள் நேற்று 4-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

72 ஆண்டுகால இந்தியாவில் பல அரசுகள் ஆட்சி செய்து இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில் யார் இந்தியன் என்று கூட தெரியாமல் இருந்து இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்கின்றனர். எனக்கு சான்றிதழ் இருக்கிறது. என் பெற்றோருக்கு சான்றிதழ் இல்லை என்று பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு திசை திருப்புகிறது

நாட்டை இப்படி பதற்றமாக வைத்திருப்பதால் இந்தியன் ஏர்லைன்ஸ், எல்.ஐ.சி. விற்பனைக்கு வந்ததை யாரும் பேசவில்லை. தூய காற்று வாங்க ரூ.4 ஆயிரத்து 100 கோடி செலவழிக்க போகிறார்கள். இதுபற்றி யாரும் பேசவில்லை. குடியுரிமை பிரச்சினை ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த சட்டத்தை கொண்டு வந்து மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது. குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது.

குடியுரிமை சான்றிதழை அவர்கள் கேட்க போவதில்லை. நாமும் கொடுக்க போவதில்லை. இந்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். கொரோனா வைரஸ் தமிழகத்திற்கு வரவில்லை. ஆனால் நாம் முன்எச்சரிக்கையாக இருக்கிறோம். அது போலவே குடியுரிமை திருத்த சட்டம் வந்தால் பாதிப்பு என்பதால் எதிர்க்கிறோம்.

10 ஆண்டுகளாக முறைகேடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் ஒரே மையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த முறைகேடு நடந்து இருக்கிறது.

காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரே எதிரி நாம் தமிழர் கட்சி தான். காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இதே போல பாபர் மசூதியை இடித்தது பா.ஜனதா கட்சி. அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ் கட்சி. இதை யாராலும் மறுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story