திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா - நாளை தேரோட்டம்


திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா - நாளை தேரோட்டம்
x
தினத்தந்தி 6 March 2020 9:00 PM GMT (Updated: 6 March 2020 5:59 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை தேரோட்டம் நடக்கிறது.

திருச்செந்தூர், 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

8-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மேலக்கோவில் சேர்ந்த சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மதியம் சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

9-ம் நாளான இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது. 10-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

11-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவில் தெப்பத் திருவிழா நடைபெறும். 12-ம் நாளான 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு கோலத்துடன் வீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story