கொரோனா வைரஸ் எதிரொலி கோவையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின


கொரோனா வைரஸ் எதிரொலி கோவையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 19 March 2020 12:00 AM GMT (Updated: 18 March 2020 9:05 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவையில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு விட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் அவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில்தான் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்வார்கள் என்பதால் அங்கு அடிக்கடி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. அத்துடன் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கருவி மூலம் ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

சுத்தம் செய்யும் பணி

வழக்கம்போல நேற்றும் கோவையில் உள்ள முக்கிய கோவில்கள் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம் உள்பட ஏராளமான கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிவாசல்களில் வழக்கம்போல தொழுகை நடந்து வருவதால் அங்கு தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோன்று கோவில்கள், ஆலயங்கள், பள்ளி வாசல்களுக்கு வந்து செல்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சாலைகள் வெறிச்சோடின

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். முக்கிய வேலைகளுக்காக மட்டுமே வெளியே சென்று வருகிறார்கள். சிலர் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை முன்கூட்டியே வீடுகளில் வாங்கி வைத்து உள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளதால் கோவையில் உள்ள முக்கிய சாலைகளான ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி சாலை, நஞ்சப்பா சாலை, காந்திபுரம் மேம்பாலம், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ்கட் வீதி, 100 அடி ரோடு உள்பட சாலைகள் வெறிச்சோடின.

கும்பலாக வர வேண்டாம்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வருகிறார்கள். கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் கைகளில் கிருமி நாசினி கொடுத்து கைகழுவ சொல்கிறார்கள். சில வங்கிகளின் நுழைவு வாயிலில் கைகழுவுவதற்காக வாஷ் பேசின் மற்றும் கிருமி நாசினி, சோப்பு, துண்டு ஆகியவற்றையும் வைத்துள்ளனர். உள்ளே செல்பவர்கள் கைகளை கழுவிக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் ஒரு அலுவலகத்துக்கு வழக்கமாக 4 அல்லது 5 பேர் செல்வார்கள். அவ்வாறு செல்லாமல் அலுவலக பணி நிமித்தமாக யார் உள்ளே செல்ல வேண்டுமோ அவர் மட்டுமே வர வேண்டும் என்றும் மற்றவர்கள் கும்பலாக அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று மத்திய, மாநில அரசு அலுவலக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பரிசோதனை

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. யாருக்காவது தொடர்ந்து காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

அரசு ஆஸ்பத்திரியில் ஒரு நுழைவு வாயில் மூடப்பட்டது

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கோவை மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு 2 முக்கிய நுழைவு வாயில்கள் உள்ளன. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்திற்கு செல்லும் 2-வது நுழைவு வாயில் நேற்று மாலை திடீரென மூடப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்தால் மட்டும் திறக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் உள்ள பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் மட்டும் திறக்கப்படும் என்றனர்.

Next Story