‘வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்’ - பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்


‘வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்’ - பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 March 2020 11:42 PM GMT (Updated: 21 March 2020 11:42 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் நேற்று வரை 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு கலபுரகியை சேர்ந்த முதியவர் பலியாகி இருக்கிறார். மேலும் 19 பேருக்கு நேற்று வரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சிலரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப் படுத்த முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்காக இன்று (ஞாயிற்றுக் கிழமை) மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என்றும், இதையொட்டி காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, இன்று கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக வருகிற 31-ந் தேதி வரை வணிகவளாகங்கள், தியேட்டர்களை மூடவும், பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கையொட்டி ரெயில் சேவையும் முற்றிலும் நிறுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் கோவில்கள் மூடப்படுகிறது.

ஆட்டோ, வாடகை கார்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று மாலை 6 மணியில் இருந்தே பெங்களூரு உள்பட மாநிலத்தில் ஓட்டல்கள், மதுபான விடுதிகள், கடைகள் மூடப்பட்டன. ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. மாறாக ஓட்டல்களில் பார்சல் சாப்பாடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் ஓடாது என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் நேற்று முன்தினமே அறிவித்துள்ளது. அதுபோல, அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு பஸ்கள் பெருமளவு இயக்கப்படாது என்றும், முற்றிலும் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்துவது சாத்தியமில்லை என்றும், நிலைமைக்கு ஏற்றவாறு அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றும் துணை முதல்-மந்திரியான, போக்குவரத்து துறையை தன்வசம் வைத்துள்ள லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கர்நாடக அரசு பஸ்கள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படாது என்றும் லட்சுமண் சவதி கூறியுள்ளார். இதற்கிடையில், மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு பீனியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இன்று மூடப்படும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு சிக்பேட்டையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்றும், பெங்களூருவில் உள்ள மார்க்கெட்டுகளும் இன்று மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்குக்கு அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், வக்கீல்கள், பிற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும் ஆதரவு தெரிவித்திருப்பதுடன், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் அரசின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் கர்நாடகத்தில் இன்று நடைபெறும் மக்கள் ஊரடங்கிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் முழு ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் கர்நாடகம் இன்று ஸ்தம்பிப்பது உறுதியாகி உள்ளது.

அதே நேரத்தில் மக்களுக்கு அத்தியாவசியமாக கிடைக்க வேண்டிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. பால், மருந்துகடைகள், அரசு, தனியார் மருத்துவமனைகள் திறந்து இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளின் பிரிவு இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலை பாதிக்கப்படுவோர்கள் அரசு ஆஸ்பத்திரிகளை நாடும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் ஊரடங்கு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் கர்நாடக அரசு வெற்றிகரமாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மாநிலத்தில் உள்ள 6½ கோடி மக்களின் ஆதரவே காரணமாகும். பிரதமர் நரேந்திர மோடி நாளை (அதாவது இன்று) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகத்தில் மக்கள் ஊரடங்கிற்கு மாநில மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்காக 9 மணிக்கு பின்பு ஊரடங்கு முடிந்து விட்டதாக மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, அதனை கொண்டாட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான் எடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கை தான் ஊரடங்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 9 மணிக்கு பின்பும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநில மக்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன். மாலை 5 மணியளவில் ஜன்னல் அருகேயே, வீட்டு மாடியில் நின்றோ கைகளை தட்டி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்கள் ஊரடங்கு இன்று நடைபெறுவதையொட்டி நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா தனது வீட்டிலேயே இருந்தார். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. மந்திரிகள் உள்ளிட்ட யாரையும் நேற்று அவர் சந்தி்த்து பேசவில்லை. அதே நேரத்தில் தேவையில்லாமல் தன்னை வந்து யாரும் சந்திக்க வேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மக்கள் ஊரடங்கையொட்டி இன்று பெங்களூரு நகரவாசிகள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும், அதையும் மீறி தேவையற்ற முறையில் யாராவது நடமாடினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் எச்சரித்துள்ளார்.


Next Story