வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்


வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 23 March 2020 11:34 PM GMT (Updated: 23 March 2020 11:34 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்புக்காக போக்குவரத்தை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறையும் இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது பங்களிப்பை ஆற்றி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து கிராமந்தோறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 4 உட்கோட்டங்களில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார் அடங்கிய 6 பேர் கொண்ட காவலர் குழுவை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

காவலர் குழுவினர் விழிப்புணர்வு

இந்த காவலர் குழுவினர் நேற்று முதல் தங்களது காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பரவும் விதம், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், கை கழுவும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் வாகன போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலைகளில் சில நிமிடங்கள் போக்குவரத்தை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கை கழுவும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விழுப்புரம் நகரில் புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங் களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்கு கூடியிருந்த வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்தும், கை கழுவும் முறை குறித்தும் விளக்கி பேசினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story