கோடை வெயிலால் குளமாக மாறிய அடவிநயினார் அணை


கோடை வெயிலால் குளமாக மாறிய அடவிநயினார் அணை
x
தினத்தந்தி 1 May 2020 10:30 PM GMT (Updated: 1 May 2020 6:51 PM GMT)

அனல் பறக்கும் கோடை வெயிலால் அடவிநயினார் அணை நீர் மட்டம் 70 அடியாக குறைந்தது. இதனால் அணையானது, குளம்போல் காட்சி அளிக்கிறது.

அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேக்கரை அருகில் அனுமன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது அடவிநயினார் அணை. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 132 அடியாகும். இதன் மூலம் சுமார் 7,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் போது அணை நிரம்பியது.

தற்போது பிசான சாகுபடி முடிவடைந்து விட்டது. இந்தாண்டு மழையின் அளவு குறைந்து அணைக்கு வரும் நீர் முற்றிலுமாக நின்று விட்டது. அனல் பறக்கும் கோடை வெயிலால் அணையின் நீர்மட்டம் நேற்று 70 அடியாக குறைந்து குளம் போல் காட்சியளிக்கிறது. 

கடந்த ஆண்டு இதே நாளில் 25 கன அடி தண்ணீர் இருந்தது. தற்போது வாழை, தென்னை, கடலை, உளுந்து ஆகியவற்றுக்கு தேவையான 5 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுகிறது.

குடிநீர் தேவை

இதேபோல் கடையநல்லூர் அருகே உள்ள 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணையில் தற்போதைய நீர் இருப்பு 37.17 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 5 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுகிறது.

Next Story