சேலத்தில் கொரோனா பாதிப்பு குறைய வேண்டி உழவர் சந்தையில் பொதுமக்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு


சேலத்தில் கொரோனா பாதிப்பு குறைய வேண்டி உழவர் சந்தையில் பொதுமக்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 3 May 2020 10:30 PM GMT (Updated: 3 May 2020 9:27 PM GMT)

சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய வேண்டி அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் பொதுமக்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.

சேலம், 

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், குறைவாக உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், பாதிப்பில்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் என வரையறுக்கப்பட்டு மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.

அந்த வரிசையில் சேலம் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சேலம் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்தது.

ஆனால் தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியிருப்பதால் அதற்காக அயராமல் உழைத்த டாக்டர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் மற்றும் அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சேலத்தில் கொரோனா பாதிப்பு குறைய வேண்டியும் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் நேற்று பொதுமக்களும், விவசாயிகளும், அரசு அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்து கைதட்டினர். இதில் அஸ்தம்பட்டி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டு கைகளை தட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து சேலம் மாவட்டம் முழுமையாக விடுபட்டு பச்சை மண்டலத்தில் இடம்பெறுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Next Story