நாமக்கல் மாவட்டம் முழுவதும் 3,184 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்


நாமக்கல் மாவட்டம் முழுவதும் 3,184 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 15 May 2020 3:38 AM GMT (Updated: 15 May 2020 3:38 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் உள்பட மொத்தம் 3,184 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்பி விட்டனர். எனவே நாமக்கல் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

இதற்கிடையே கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

சோதனை சாவடிகள்

மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 5 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி இருப்பதால், பிரசவத்துக்கு இன்னும் 10, 15 நாட்கள் உள்ள கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு திரும்புவோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

3,184 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 5,700-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்களில் சுமார் 300 பேர் கர்ப்பிணிகள் ஆவார்கள். தற்போதும் கட்டுப்பாட்டு மண்டலம் பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்கள், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து திரும்பியவர்கள் என தினசரி சுமார் 100 பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டம் சென்று திரும்பிய நபர்களில் 9,500 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் 14 நாட்கள் முடிந்த 6,746 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள 2,754 பேர் தொடர்ந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 3 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 430 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாக மாவட்டம் முழுவதும் 3,184 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story