திண்டிவனத்தில் பயங்கரம்; பா.ம.க. பிரமுகர் கொலை


திண்டிவனத்தில் பயங்கரம்; பா.ம.க. பிரமுகர் கொலை
x
தினத்தந்தி 20 May 2020 2:42 AM GMT (Updated: 20 May 2020 2:42 AM GMT)

திண்டிவனத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டார். மதுபோதை யில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் போலீசில் சரணடைந்தார். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திண்டிவனம், 

திண்டிவனம் தீர்த்த குளத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 49). பா.ம.க. பிரமுகர். இவர், அதே பகுதியில் கோழி இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ரெயில் விபத்தில் செங்குட்டுவனின் கால் துண்டானது. இதையடுத்து அவருக்கு செயற்கைகால் பொருத்தப்பட்டிருந்தது.

செங்குட்டுவன் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் தீர்த்தகுளத்தை சேர்ந்த குமார் மகன் சதீஷ்(25) என்பவர் மதுபோதையில் அங்கு வந்தார்.

அப்போது சதீஷ், மது தருமாறு கேட்டார். ஆனால் செங்குட்டுவன் மது கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், செங்குட்டுவனை அடித்தார். இதில் தடுமாறி விழுந்த அவரது கழுத்தின் மீது மேஜையை கவிழ்த்து போட்டு, அதன் மீது சதீஷ் அமர்ந்து கொண்டு அழுத்தினார். இதில் செங்குட்டுவன் துடிதுடித்து இறந்தார்.

செங்குட்டுவன் இறந்ததை உறுதி செய்த சதீஷ், நள்ளிரவு 12 மணிக்கு திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது அவர், மதுபோதையில் செங்குட்டுவனை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செங்குட்டுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சதீசை போலீசார் கைது செய்தனர். கொலையான செங்குட்டுவனுக்கு காந்திமதி (40) என்ற மனைவியும், பிரவீன் (22) என்ற மகனும், பிரீத்தி (18) என்ற மகளும் உள்ளனர். திண்டிவனத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story