புதுவையில் 29 பேருக்கு கொரோனா; ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பலி


புதுவையில் 29 பேருக்கு கொரோனா; ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 29 Jun 2020 3:08 AM GMT (Updated: 29 Jun 2020 3:08 AM GMT)

புதுச்சேரியில் நேற்று 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற போலீஸ்காரர் பலியானார்.

புதுச்சேரி,

புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மிக வேகமாக பரவுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 87 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று 512 பேருக்கு உமிழ்நீர் மாதிரிகள் சோதிக்கப்பட்டு முடிவுகள் வந்தன. இதில் புதுவையை சேர்ந்த 28 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 29 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும், ஜிப்மரில் 6 பேரும், ஏனாமில் ஒருவர், பிற மாநிலங்களில் 2 பேரும் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற போலீஸ்காரர்

கடந்த காலங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 22 பேரும், ஜிப்மரில் இருந்து 8 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதற்கிடையே ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோரிமேடு போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற போலீஸ்காரர் ஒருவர் பலியாகி உள்ளார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக இதுவரை 648 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 385 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 15,225 உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 191 பேருக்கு இன்னும் முடிவு வரவில்லை.

Next Story