நெல்லையில் கொரோனாவுக்கு வாலிபர் பலி; 45 பேர் பாதிப்பு


நெல்லையில் கொரோனாவுக்கு வாலிபர் பலி; 45 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 1 July 2020 1:04 AM GMT (Updated: 1 July 2020 1:04 AM GMT)

நெல்லையில் நேற்று கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். மேலும் 45 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 2 தாசில்தார்கள் உள்பட 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 16-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அம்பை, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை ஊரக பகுதி, வள்ளியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 796 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 11 பேருடன் சேர்த்து 572 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர்.

வாலிபர் பலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த 37 வயதுடைய வாலிபர் சென்னையில் வேலை செய்து வந்தார். அவர் சமீபத்தில் நெல்லை திரும்பினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் திடீரென்று இறந்தார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 216 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை அருகே உள்ள தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் பணி மாறுதலாகி சென்றார். முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாழையூத்து போலீஸ் நிலையம், போலீசார் குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

2 தாசில்தார்களுக்கு தொற்று

தென்காசி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர், 19 தாசில்தார்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார். அதில் ஒருவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அந்த நேரம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் அவர் பணியில் சேரவில்லை. இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி வருவாய் ஆய்வாளருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தென்காசி தாலுகா அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் அடைக்கப்பட்டது.

இதேபோல் வீரகேரளம்புதூர் தாசில்தார் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாலுகா அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது. இதில் 179 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். மீதி 168 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடியில் உள்ள ராமசந்திராபுரத்தில திருமண வீட்டுக்கு சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக்கடை ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த ஜவுளிக்கடை நேற்று மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடி பிரையண்ட்நகர், திரேஸ்புரம், ஜின்பாக்டரி ரோடு, டூவிபுரம், மகிழ்ச்சிபுரம், அண்ணாநகர், டபிள்யூ.ஜி.சி. ரோடு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 943 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 662 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story