ஊரடங்கை மீறி நடந்த நிகழ்ச்சிகளை கவனிக்காமல் இருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்


ஊரடங்கை மீறி நடந்த நிகழ்ச்சிகளை கவனிக்காமல் இருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 July 2020 4:21 AM GMT (Updated: 17 July 2020 4:21 AM GMT)

ஊரடங்கை மீறி நடந்த நிகழ்ச்சிகளை கவனிக்காமல் இருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மற்றொருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்களுக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. தற்போது கிராமங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மஞ்சூர் அருகே தாம்பட்டி, தங்காடு, ஓரநள்ளி ஆகிய 3 கிராமங்களில் நடந்த 2 திருமண நிகழ்ச்சிகள், ஒரு துக்க நிகழ்ச்சியே காரணம் ஆகும். இந்த நிகழ்ச்சிகள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமலும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமலும் நடைபெற்றது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, குறைந்த நபர்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தாமல் வழக்கம்போல் பாரம்பரியமாக நடத்தப்பட்டு உள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்ற எப்பநாடு, கடநாடு, அத்திக்கல், முட்டிநாடு உள்பட 11 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடந்து வருவதால் கிராமங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் வசித்து வரும் கிராமங்கள் கிளஸ்டர் ஆக உருவாகி உள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் அபாயம் இருக்கிறது.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட 3 கிராமங்களில் ஊரடங்கை மீறி நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகம் பேர் கலந்துகொண்டதாகவும், இதனால் நோய் தொற்று அதிகரித்ததாகவும் புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொள்ளாமல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறியும், கவனிக்க தவறியதாகவும் அந்த கிராமங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கலெக் டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவுபடி ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவரை பணியிடை நீக்கம் செய்தார்.

மேலும் கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட ஜெகதளா காரக்கொரை கிராமத்தில் காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுரேசிடம் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறும்போது, கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை கண்காணிப்பது, ஏதேனும் புகார் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.1,000 வீட்டிற்கே சென்று வழங்குவது போன்ற பணிகளில் விடுமுறை இல்லாமல் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

Next Story