கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது


கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2020 6:47 AM GMT (Updated: 21 July 2020 6:47 AM GMT)

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிகொலை செய்த வழக்கில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம்,

கடலூர் அருகே உள்ள கீழ்அருங்குணத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் மாலை சுபாஷ், தனது நண்பர்கள் 3 பேருடன் அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்றார்.அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் சுபாசை சரிமாரியாக வெட்டிக்கொன்றது. இதையடுத்து அவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. முன்விரோத தகராறில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

11 பேரிடம் விசாரணை

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுபாஷ் அண்ணன் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் தாமோதரன், ராஜதுரை, கவியரசு, சுப கணேஷ், தமிழ்வாணன், வில்டர், மணிமாறன், தர்மராஜ், தினேஷ், பக்கிரி, மணிவண்ணன், வேங்கடபதி ஆகிய 12 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கீழ்அருங்குணம் கெடிலம் ஆறு மற்றும் சுடுகாடு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று அங்கே பதுங்கி இருந்த தாமோதரன் உள்பட 11 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தர்மராஜை தேடி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று காலை சுபாசின் உடலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் அவரது உறவினர்கள், கொலை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தால் தான் பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்து, உடலை வாங்குவோம். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். தொடர்ந்து சுபாசின் உறவினர்கள், ஆதரவாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனையின் பிணவறை எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த மறியலால் அங்கு போக்குவரத்து பாதிப்பும், பதற்றமான சூழ்நிலையும் உருவானது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுபாசை கொலை செய்த அனைவரையும் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்ததும் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து சுபாசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்

இந்தநிலையில் நேற்று காலை சுபாஷ் ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுபாஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும்உடனடியாக கைது செய்யப்படுவார்கள். ஆகையால் அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story