குளித்தலை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்


குளித்தலை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 29 Aug 2020 11:11 PM GMT (Updated: 29 Aug 2020 11:11 PM GMT)

குளித்தலை பகுதியில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், நோய்பரவல் என்பது அதிகரித்தே வருகிறது. குளித்தலை நகர மற்றும் கிராமப்பகுதிகளில் தற்போது வரை 75-க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சிலர் சிகிச்சை பெற்றும், பலர் சிகிச்சை பெற்றுக்கொண்டும் வருகின்றனர். ஒருசிலர் உயிரிழந்தும் உள்ளனர். பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் நோய்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

ஆனாலும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கூறவேண்டும். குளித்தலை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு தினசரி செல்லும் பொதுமக்கள் பலர் முககவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நிற்கின்றனர். அதிலும் குறிப்பாக தெருக்களில் பால் விற்பனை செய்யும் இடங்கள் காய்கறி, இறைச்சி, டீக்கடைகள் போன்றவற்றிக்கு செல்லும் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. அதன்காரணமாக ஒரு டீக்கடைக்குகூட அண்மையில் சீல்வைக்கப்பட்ட நிகழ்வும் குளித்தலையில் நடந்துள்ளது.

சமூக இடைவெளி

காய்கறிக்கடைகள் திறக்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட நேரம் மட்டுமே காய்கறிகடைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. வியாபாரிகள் என்னதான் எச்சரிக்கை செய்தாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்கள் பலரால், பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். என்னதான் நகராட்சி, வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரத்துறை போன்ற துறை அதிகாரிகள் எச்சரித்தாலும் அதை ஒரு பொருட்டாக பொதுமக்கள் கருதுவதில்லை.

முககவசம் அணியாமல் வெளி வரும் நூற்றுக்கணக்கான பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும், பலர் முககவசம் அணிவதை தவிர்த்தே வருகின்றனர். இதனால் நோய் பரவல் ஏற்பட்டு தாங்களும் பாதிக்கப்படுவோம் என்றுகூட அவர்கள் அச்சப்படுவதில்லை. தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிக்கொள்ளாமல் தினசரி கடைகளுக்கு சென்று வாங்குவோர் பலர் உண்டு. மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், சனிக்கிழமைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இதுபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் சுற்றித்திரியும் பொதுமக்களால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு, கொரோனா நோய்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயமான நிலை குளித்தலை பகுதியில் தற்போது ஏற்பட்டுவருகிறது.

Next Story