கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சம் ஒரே நாளில் 421 பேருக்கு கொரோனா டாக்டர் உள்பட 6 பேர் தொற்றுக்கு பலி


கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சம் ஒரே நாளில் 421 பேருக்கு கொரோனா டாக்டர் உள்பட 6 பேர் தொற்றுக்கு பலி
x
தினத்தந்தி 30 Aug 2020 1:18 AM GMT (Updated: 30 Aug 2020 1:18 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் டாக்டர் உள்பட 6 பேர் தொற்றுக்கு பலியானார்கள்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 7,340 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் கடலூர், சிதம்பரத்தை சேர்ந்த 2 செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர் ஒருவர், 5 கர்ப்பிணிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 228 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 180 பேருக்கும், சென்னை, துபாயில் இருந்து வந்த 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 10,755 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நேற்று 6 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

டாக்டர்

கடலூர் முதுநகரை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர், திருப்பாதிரிப்புலியூரில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார்.

தூய்மை பணியாளர்

கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் 48 வயது நபர். தூய்மை பணியாளரான இவர், கடலூர் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரிடையாக சென்று கிருமிநாசினி தெளித்தல், குடியிருப்பு பகுதிகளை சுத்தப்படுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர், கொரோனாவுக்கு பலியான சம்பவம், தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

157 பேர் குணமடைந்தனர்

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த 41 வயது நபர், கடலூர் அரசு மருத்துவமனையிலும், நெய்வேலியை சேர்ந்த 49 வயது பெண், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 73 வயது முதியவர், சிதம்பரத்தை சேர்ந்த 75 வயது முதியவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

நேற்று மட்டும் 157 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 2,632 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

Next Story