பெல்ஜியத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1 கோடி போதைப்பொருள் சிக்கியது


பெல்ஜியத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1 கோடி போதைப்பொருள் சிக்கியது
x

பெல்ஜியத்தில் இருந்து பெங்களூருவுக்கு மசாஜ் கருவிகளில் வைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி போதைப்பொருட்கள் சிக்கி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கவும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை ஒழிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் கன்னட திரை உலகினர் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்கள் மற்றும் அதில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த போதைப்பொருட்களும் சிக்கவில்லை. இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த சரக்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரூ.1 கோடி மதிப்பு

அப்போது பெல்ஜியம் நாட்டில் இருந்து வந்திருந்த மசாஜ் கருவிகள் மீது அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, மசாஜ் கருவிகள் வந்த பார்சல்களை பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மசாஜ் செய்யும் கருவிகளுக்குள் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மசாஜ் கருவிகள் அனைத்தையும் சோதனை செய்து பார்த்த போது ஒட்டு மொத்தமாக ஒரு கிலோ 980 கிராம் போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து மசாஜ் கருவிகளை அனுப்பியது யார்?, அந்த கருவிகள் பெங்களூருவில் யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது?, இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தேவனஹள்ளி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தான் ரூ.1¼ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கி இருந்தது. தற்போது மீண்டும் ரூ.1 கோடிக்கு அதிகமான போதைப்பொருட்கள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story