ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Sep 2020 4:29 PM GMT (Updated: 13 Sep 2020 4:29 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், 2 பேர் பலியானார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக 100-க்கும் குறைவானவர்களே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 136 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 409 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட திண்டல் சக்திநகர், வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், மணல்மேடு, கொல்லம்பாளையம், நாடார்மேடு, முனிசிபல்சத்திரம், ரெயில்வே காலனி, அருள்வேலவன் நகர், தண்ணீர்பந்தல்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, ஈ.பி.பி.நகர், பழையபாளையம், சூரம்பட்டி நால்ரோடு, கருங்கல்பாளையம், வி.வி.சி.ஆர்.நகர், மூலப்பாளையம், சூளை, குமரன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, சித்தோடு, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

2 முதியவர்கள்

நேற்று மட்டும் 96 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 347 பேர் குணமடைந்து உள்ளனர். 1,006 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே மாவட்டத்தில் 54 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், மேலும் 2 முதியவர்கள் உயிரிழந்து உள்ளனர். பெருந்துறையை சேர்ந்த 85 வயது முதியவரும், நசியனூரை சேர்ந்த 68 வயது முதியவரும் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருந்துறையை சேர்ந்தவர் 10-ந் தேதியும், நசியனூரை சேர்ந்தவர் நேற்று முன்தினமும் பரிதாபமாக இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.

Next Story