திண்டிவனத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ லட்சம் கொள்ளை


திண்டிவனத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 15 Sep 2020 2:59 AM GMT (Updated: 15 Sep 2020 2:59 AM GMT)

திண்டிவனத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் ஜெயபுரம் 2-வது தெருவில் வசிப்பவர் செந்தில் சங்கர்(வயது 49). தொழில் அதிபரான இவர், திண்டிவனத்தில் பாரத் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மேலும் சென்னையில் ஓட்டல்களும் நடத்தி வருகிறார். செந்தில்சங்கர், கடந்த 3-ந் தேதி குடும்பத்துடன் கோவில்பட்டிக்கு சென்றார்.

நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது.

பணம் கொள்ளை

பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 600-ஐ காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story