ஊரடங்கில் தளர்வு அளித்தும், விற்பனையாகாத கலைத்தட்டுகள்: வாழ்வாதாரம் ஏற்றம் பெற வழியின்றி தவிக்கும் கைவினை கலைஞர்கள்


ஊரடங்கில் தளர்வு அளித்தும், விற்பனையாகாத கலைத்தட்டுகள்: வாழ்வாதாரம் ஏற்றம் பெற வழியின்றி தவிக்கும் கைவினை கலைஞர்கள்
x
தினத்தந்தி 17 Sep 2020 1:33 AM GMT (Updated: 17 Sep 2020 1:33 AM GMT)

ஊரடங்கில் தளர்வு அளித்தும் கலைத்தட்டுகள் விற்பனையாகாததால் வாழ்வாதாரம் ஏற்றம் பெற வழியின்றி கைவினை கலைஞர்கள் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்,

சோழர் காலம் முதல் பாரம்பரிய கலைகளின் பிறப்பிடமாகவும், கலைகளுக்கு புகழ் பெற்ற இடமாகவும் தஞ்சை விளக்குகிறது. தலையாட்டி பொம்மை, வீணை, ஓவியங்கள் வரிசையில் கலைத்தட்டும் தஞ்சையின் கலை பொக்கிஷத்திற்கு சான்றாக விளங்கி வருகிறது. தஞ்சையின் கலைப்புகழை பறைசாற்றுவதில் தஞ்சை தட்டு என்று அழைக்கப்படும் கலைத்தட்டுகளுக்கு சிறப்பு இடம் உண்டு.

தஞ்சை கலைத்தட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால், மராட்டியர் ஆட்சி காலத்தில்(1777-1832) அறிமுகப்படுத்தப்பட்டது. விழாக்களின்போது பரிசு பொருட்கள் வழங்குவதற்காக வட்டமாக தட்டுபோன்று கலைநுணுக்கங்களுடன் செய்யப்பட்டது. பித்தளை, செம்பு, சுத்தமான வெள்ளி, அரக்கு போன்ற மூலப்பொருட்களை கொண்டு கலைத்தட்டு செய்யப்படுகிறது. இந்த தட்டில் கண்களை கவரும் வகையில் மயில், கோபுரம், தாமரை, நடராஜர், தாமரை பூவின் மேல்நிற்கும் பார்வதி போன்ற வடிவங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சி

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது கலைத்தட்டில் அரசியல் தலைவர்களின் உருவம், விளையாட்டு போட்டிகள் தொடர்பான படங்கள் பதிக்கப்பட்டு கலைநயத்துடன் கலைத்தட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த கலைத்தட்டுகள் முதலில் வட்ட வடிவில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்தது.

ஆனால் காலப்போக்கில் சதுரம், முக்கோணம் வடிவிலும் கலைத்தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கலைத்தட்டுகள் தயாரிக்கும் பணியில் 250 கைவினை கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலருக்கு தொடர்ந்து கலைத்தட்டு தயார் செய்யும் பணி கிடைக்காததால் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது கலைத்தட்டு தயாரிக்கும் தொழிலில் கிட்டத்தட்ட 60 பேர் மட்டுமே முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு கைவினை கலைஞரால் 3 முதல் 4 கலைத்தட்டுகள் தான் உருவாக்க முடியும். ஒரு தட்டுக்கு ரூ.100 வீதம் வருமானம் கிடைக்கும். இதனால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.400 வரை கூலி கிடைக்கும். அதுவும் மாதத்தில் 5 முதல் 10 நாட்கள் தான் வேலை இருக்கும். மற்ற நாட்களில் வேலை இருக்காது.

இப்படி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கொரோனா ஊரடங்கு முழுமையாக பாதித்தது. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முன்புபோல் கலைத்தட்டுகள் உற்பத்தியை கைவினை கலைஞர்களால் தொடங்க முடியவில்லை. ஏற்கனவே தயார் செய்துள்ள கலைத்தட்டுகளை வாங்கி செல்வதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி கைவினை கலைஞர்கள் தவித்து வருகின்றனர்.

ஏற்றம் பெற வழியின்றி...

ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டாலும் திருமண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்படவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அன்பளிப்பு பொருளாக கலைத்தட்டுகள் வழங்கினால் தான் விற்பனையும் அதிக அளவில் நடைபெறும். ஆனால் அதற்கு வழிவகை இல்லாத காரணத்தினால் தளர்வு அளிக்கப்பட்டும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் ஏற்றம்பெற வழியின்றி தவித்து வருகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கலைத்தட்டை விரும்பி அதிகமாக வாங்கி செல்வார்கள். மேலும் வெளிநாடுகளுக்கும் கலைத்தட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் கலைத்தட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தொடங்கப்பட்டால் கலைத்தட்டுகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சுபநிகழ்ச்சிகள்

இது குறித்து கைவினை கலைஞர்கள் கூறும்போது, கடந்த 6 மாதங்களாக கலைத்தட்டு விற்பனையாகவில்லை. கலைத்தட்டுகள் தேங்கி கிடப்பதால் உற்பத்தி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வாங்கி சென்ற கலைத்தட்டுகளுக்கு பணம் கொடுக்காமல் இருக்கின்றனர்.

முன்புபோல் சுபநிகழ்ச்சிகள் அதிக அளவில் நடந்தால் மட்டுமே கலைத்தட்டுகளின் விற்பனை அதிகரிக்கும். எங்களது வாழ்வாதாரமும் பெருகும் என்றனர்.

Next Story