வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை


வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 21 Sep 2020 3:59 AM GMT (Updated: 21 Sep 2020 3:59 AM GMT)

வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த கடையின் காவலாளி மாயமானதால் அவரை கண்டுபிடிக்க கோரி கடைமுன்பு உறவினர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கண்மாய்கரை சாலையில் தென்னந்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சோழவந்தானை சேர்ந்த நந்தகுமார்(வயது 51) என்பவர் மேற்பார்வையாளராகவும், பால்பாண்டி(38), சங்கர்(36) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடையின் அருகில் கச்சைகட்டியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளதால் அவர் அங்கு குடிசை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். அதனால் இரவு காவலாளியாக டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தார்.

நேற்றுமுன்தினம் வழக்கம் போல் இரவு 8.30 மணிக்கு கடையை அடைத்துவிட்டு மேற்பார்வையாளரும், விற்பனையாளரும் சென்று விட்டனர். காவலாளி கணேசன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து கடைமுன்பு கட்டில் போட்டு தூங்கி விட்டார்.

சுவரை துளையிட்டு

இந்தநிலையில் மறுநாள் காலை 6 மணிக்கு வீட்டிற்கு வர வேண்டிய கணேசன் நீண்டநேரமாகியும் வரவில்லை. இதனால் கணேசனை தேடி அவரது மகள் தாமரைசெல்வி கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையின் ஒரு பகுதியில் சுவர் துளையிடப்பட்டு இருந்தது. மேலும் தந்தையை காணவில்லை. அவரது செருப்பு மட்டும் அங்கு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளவர்களிடம் இதுபற்றி தெரிவித்தார்.

இதையடுத்து வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கேசவ ராமச்சந்திரன், ராமநாதன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து மர்ம நபர்கள் 10 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். பணம் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் அதை அவர்களால் திருட முடியவில்லை என்றும் தெரியவந்தது.

போராட்டம்

ஆனால் காவலாளி கணேசன் என்ன ஆனார், எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை கொள்ளையர்கள் கடத்தி சென்றார்களா என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மேப்பநாய் வரவழைக்கப்பட்டு அது நான்கு திசைகளிலும் ஓடியது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் கணேசனை கண்டுபிடித்து தரக்கோரி கடை முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story