கோவையில் கொரோனா பரிசோதனை வாகனங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்


கோவையில் கொரோனா பரிசோதனை வாகனங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Sep 2020 4:13 AM GMT (Updated: 22 Sep 2020 4:13 AM GMT)

கோவையில் 20 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை அடுத்த சுண்டக்காமுத்தூரில் நேற்று நடமாடும் கொரோனா தொற்று பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன், வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தினமும் 7 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளவும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களை விரைவில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக தற்போது 20 நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பரிசோதனை வாகனத்தில் ஆய்வு பரிசோதனை மேற்கொள்பவர், நர்ஸ், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் இருப்பார்கள். மேலும் வாகனத்தில் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காய்ச்சல் முகாம்கள்

கோவை மாவட்டத்தில் இதுவரை 10,810 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 11,63,212 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோவை மாநகர் பகுதியை 5 மண்டலங்களாகவும், ஊரகப்பகுதிகளை 5 மண்டலங்களாகவும் பிரித்து மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 5 அலுவலர்களும், துணை கலெக்டர் நிலையில் 5 அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தில் இதுவரை 3,27,516 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 25,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 21,168 பேர் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு நோய் தொடர்பிலிருந்த 382 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தற்போது 3,838 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிர் காக்கும் மருந்துகள்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருதல், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை வீடுகளுக்கு கொண்டு விடுதல் ஆகிய பணிகள் 108 ஆம்புலன்ஸ்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. முதல்-அமைச்சர் உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 118 புதிய ஆம்புலன்ஸ் சேவையை கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இதில் கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 9-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொரோனா சிகிச்சைக்காக இயங்கி வரும் நிலையில், மேலும் 12 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதை சேர்த்து கோவையில் மொத்தம் 53 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப்பணியாளர்கள் இருப்பார்கள்.

சித்த மருத்துவம்

கோவை மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 9,386 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவம் முறை சிகிச்சை மையத்தில் 782 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தற்போது 730 நபர்கள் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 52 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் பற்றி பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற செயல்களின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story