மாவட்டம் முழுவதும் வேளாண் மசோதாக்களை கண்டித்து 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் - தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு


மாவட்டம் முழுவதும் வேளாண் மசோதாக்களை கண்டித்து 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் - தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 22 Sep 2020 10:30 PM GMT (Updated: 22 Sep 2020 7:25 PM GMT)

மாவட்டம் முழுவதும் வேளாண் மசோதாக்களை கண்டித்து 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்,

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது. இந்த மாசோதாக்களை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் திராவிடர் கழகம் சார்பில் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத், ம.தி.மு.க. பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குழந்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி முத்துராஜா உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் 3 சட்டங்கள் குறித்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் வருகிற 28-ந் தேதி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Next Story