மின் தடைக்கு காரணம் என்ன? மந்திரி நிதின் ராவத் பதில்


மின் தடைக்கு காரணம் என்ன? மந்திரி நிதின் ராவத் பதில்
x
தினத்தந்தி 12 Oct 2020 9:25 PM GMT (Updated: 12 Oct 2020 9:25 PM GMT)

மும்பையில் நேற்று ஏற்பட்ட மின் தடைக்கு காரணம் குறி்த்து மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் பதில் அளித்தார்.

மும்பை,

நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் பம்பாய் பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, ரிசர்வ் வங்கி, பாபா அணு ஆராய்ச்சி கழகம், தேசிய ரசாயன, உர நிறுவனம் (ஆர்.சி.எப்) மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட முக்கிய தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகளின் தலைமையகங்கள் அமைந்து உள்ளன.

இதுதவிர மும்பை பெருநகரில் பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே மும்பை நாட்டின் வணிக, வர்த்தக தலைநகராகவும் உள்ளது. இதனால் மும்பையில் மின்தடை ஏற்படுவதில்லை. எதாவது பிரச்சினை காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டாலும் அது துரிதமாக சரிசெய்யப்படும்.

டாடா காரணம்

இந்த நிலையில் மும்பையில் நேற்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட மின்தடையால் பெருநகரமே முடங்கியது. இந்தநிலையில் மின்தடைக்கு மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் ஈடுபடும் டாடா மின் நிறுவனம் தான் காரணம் என மாநில மின்சார துறை மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

தொழில்நுட்ப கோளாறு

கல்வா - பட்கா 400 கிலோவாட் மின் பாதையில் மாநில மின் பகிர்வு நிறுவனத்தினர் (எம்.எஸ்.இ.டி.சி.எல்.) பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரத்தில் முதல் மின்பாதை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் 2-வது மின்பாதையில் வழக்கத்தைவிட அதிகளவு மின்சாரம் சென்று உள்ளது. இதனால் அந்த பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story