வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் - 145 பேர் கைது


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் - 145 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2020 3:25 AM GMT (Updated: 13 Oct 2020 3:25 AM GMT)

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீரபாண்டி மற்றும் அவினாசி ரோடு ஏ.எஸ்.பி. சந்திப்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 145 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

கொரோனா தொற்று தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அரசுகளின் தவறான நடவடிக்கைகளால் மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போனதாகவும், மக்கள்விரோத, தேச விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பூர்-பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவில் நேற்றுகாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது சாலையின் நடுவே அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் அங்குள்ள ஒரு மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று தங்க வைத்தனர். சாலை மறியலால் வீரபாண்டி பிரிவில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதல் மண்டல குழு சார்பில் திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு 4 ரோட்டில் நேற்று காலை மறியல் போராட்டம் மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பல்லடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கோவை-திருச்சி மெயின் ரோட்டில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புக்காக வந்திருந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி என்றும், சாலை மறியல் செய்தால், கைது செய்து சிறையில் அடைக்கப் படும் என எச்சரித்ததை அடுத்து 10 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அவினாசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் இசாக் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பூரில் கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story