வேலூரில் கொரோனாவுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழியர் உள்பட 5 பேர் பலி


வேலூரில் கொரோனாவுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழியர் உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2020 2:00 PM GMT (Updated: 13 Oct 2020 1:44 PM GMT)

வேலூரில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழியர் உள்பட 5 பேர் பலியானார்கள்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தனியார் மருத்துவமனையில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 5 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

திருப்பத்தூர் டவுனை சேர்ந்தவர் சண்முகம் (வயது 76). இவர் கடந்த மாதம் 24-ந் தேதி கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா உறுதி செய்யப்பட்டபின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (53). இவர் கடந்த 11-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இதேபோல பெருமுகையை சேர்ந்த 78 வயது மூதாட்டி நேற்று அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் கொரோனா தீவிர நிலையை எட்டியது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல சத்துவாச்சாரி பகுதி 4-யை சேர்ந்தவர் வேதபோதகன் (45). திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேலும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடியை சேர்ந்த சரளாதேவி (50) என்பவரும் உயிரிழந்தார். இறந்தவர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

Next Story