திருவண்ணாமலையில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது


திருவண்ணாமலையில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 25 Oct 2020 9:46 AM GMT (Updated: 25 Oct 2020 9:46 AM GMT)

திருவண்ணாமலையில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

நவராத்திரி விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. 9-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயுதபூஜையும், நாளை (திங்கட்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது தொழில் மேம்படையவும், வாழ்க்கை உயர்வு அடையவும் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது ஆயுதங்களை இறைபொருளாக கருதி வணங்குவது ஆயுதபூஜையாகும். இப்பண்டிகையை சாமானியன் முதல் தொழிலதிபர் வரை பலர் கொண்டாடுவார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நேற்றும், நேற்று முன்தினமும் கொண்டாடினர். மேலும் ஆயுதபூஜையான இன்று வீடுகள், கடைகள், நிறுவனங்களில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். தங்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்து, அதனை அலங்கரித்து, மாலை, குங்குமம், சந்தனம் இட்டு பூஜை செய்வார்கள். பூஜையின்போது பொரி, பழங்கள், இனிப்பு உள்ளிட்டவற்றை வைத்து படைப்பார்கள்.

பூஜை முடிந்தவுடன் பூசணிக்காய் உடைப்பது வழக்கம். இதற்காக வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பூசணிக்காய்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேரடி வீதி, சின்னக்கடைதெரு, திருவூடல் தெரு, போளூர் சாலை, செங்கம் சாலைகளில் விற்பனைக்காக பூசணிக்காய்கள் குவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ.300 வரை பூசணிக்காய்கள் விற்பனை செய்யப்பட்டது.

பொரி, வாழைப்பழம், பூ வகைகள், பழ வகைகள் விற்பனையும் நேற்று ஜோராக நடைபெற்றது. திருவண்ணாமலை உழவர்சந்தை, பெரிய மார்க்கெட், கடலைகடை மூலை சந்திப்பு, தேரடிவீதி போன்ற பகுதிகளின் சாலையோரம் ஆயுதபூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்பட்டது.

திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள், வியாபாரிகள் பூ வாங்குவதற்காக திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள ஜோதி பூ மார்க்கெட்டில் நேற்று குவிந்தனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

மல்லிகை கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.600 வரையிலும், முல்லை கிலோ ரூ.350-ல் இருந்து ரூ.400 வரையிலும், சம்பங்கி கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.80 வரையிலும், நாட்டு சம்பங்கி கிலோ ரூ.150-ல் இருந்து ரூ.200 வரையிலும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.200 வரையிலும், அரளி கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக ஜோதி பூ மார்க்கெட் தலைவர் சண்முகம் கூறினார்.

Next Story