வத்தலக்குண்டுவில் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தி.மு.க.வினர் எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு


வத்தலக்குண்டுவில் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தி.மு.க.வினர் எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Nov 2020 3:47 AM GMT (Updated: 8 Nov 2020 3:47 AM GMT)

வத்தலக்குண்டுவில் பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினர் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதை கண்டித்து தி.மு.க.வினர் திரண்டு வந்து எதிர்கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த மாதம் 30-ந்தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விபூதி கொடுக்கப்பட்டது. இந்த விபூதியை அவர் கீழே கொட்டியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று வத்தலக்குண்டுவில் பாரதீய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட தலைவர் பசும்பொன்முத்தையா தலைமையில் நிர்வாகிகள் ஜோதி தேவர், விஜி, கார்த்திக் ஆகியோர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். மேலும் மு.க.ஸ்டாலின் ஒழிக என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை அவர்களிடம் இருந்து பிடுங்கினர். அப்போது போலீசாருக்கும், பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் நகர செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம், குமரவேல், ரமேஷ், முத்துப்பாண்டி உள்பட ஏராளமானவர்கள் அந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயன்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று எதிர்கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார், தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைய செய்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயன்றதாக பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story