பெரம்பலூர் அருகே , முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிணம் - கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை


பெரம்பலூர் அருகே , முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிணம் - கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Nov 2020 10:00 PM GMT (Updated: 12 Nov 2020 1:51 AM GMT)

பெரம்பலூர் அருகே முட்புதரில் உடல் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்திருக்கலாமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர், 

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து பிரிந்து ஆத்தூருக்கு செல்லும் புறவழிச்சாலையான எளம்பலூர் சாலையோரத்தில் உள்ள முட்புதரில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அங்கே சென்று பார்த்த போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. முகம் சிதைந்து உடல் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூா் போலீஸ் இன்ஸ்பெக்டா் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். உடல் அழுகிய நிலையில் கிடந்த பெண் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இறந்து கிடந்த பெண்ணின் உடல் அருகே பெண்கள் அணியும் வெவ்வேறு காலணிகள் 2 கிடந்தன. மேலும் பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சாலை வரைக்கும் ரத்த கறை படிந்திருந்தது. இதனால் அந்த பெண் சாலை விபத்தில் இறந்திருக்கலாமா? போலீசாருக்கு தெரியாமல் இருக்க விபத்தை ஏற்படுத்தியவர் உடலை இங்கு வந்து போட்டு விட்டு சென்றிருக்கலாமா? அல்லது பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் யாரேனும் அவரை கற்பழித்து கொலை செய்திருக்கலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உடல் அழுகிய நிலையில் கிடந்ததால், பெண்ணின் உடலை அங்கேயே வைத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story