நெல்லையில் பரிதாபம்: கொலையான வாலிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


நெல்லையில் பரிதாபம்: கொலையான வாலிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Dec 2020 11:00 PM GMT (Updated: 13 Dec 2020 4:46 PM GMT)

நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை,

நெல்லை பழையபேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகன் காளிராஜ் (வயது 25). இவர் தன்னுடைய சித்தப்பா இசக்கிமுத்துவின் மகள் மேகலாவை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் வெளியூரில் வசித்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை ரகுமத் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்தனர். அங்கு காளிராஜ் கேபிள் டி.வி. ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவில் பாளையங்கோட்டை சாந்தி நகரில் காளிராஜ் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அண்ணன்-தங்கை உறவுமுறைக்கு மாறாக, காளிராஜ் மேகலாவை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த மேகலாவின் குடும்பத்தினர் காளிராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான இசக்கிமுத்து உள்ளிட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, பாதுகாப்பு கருதி மேகலாவை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். அங்கு மனமுடைந்த நிலையில் இருந்த மேகலாவுக்கு மனநல டாக்டர்கள், காப்பக ஊழியர்கள் கவுன்சிலிங் மூலம் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் மேகலா மன வருத்தத்திலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் மேகலா தனது அறையில் உள்ள மின்விசிறியில் திடீரென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த காப்பக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, மேகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story